நலம் தரும் கீரைகள் - ஆர். கே. தெரஸா

கீரை சமைப்பது எப்படி?

கீரையை பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் சாலச் சிறந்தது. கீரையைக் கழுவியபின் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைத்துவிடவேண்டும். பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துச் சாப்பிடவும். பருப்பு வேகவைத்து கீரையுடன் சேர்த்து மசித்துக் கொள்ள சுவைகூடும்.

முருங்கைக்கீரை

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும்.

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்:

1. தாதுபலம் பெருகும்

2. ரத்த அழுத்த நோய் குணமாகும்

3. கொழுப்புச் சத்து குறையும்

4. நீரிழிவு நோய் குணமாகும்

5. சர்க்கரை நோய் குறையும்

6. காமாலை குறையும்

7. கண்பார்வை தெளிவாகும்

குறிப்பு: மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்க்கக்கூடாது.

சிறு கீரை

சுவையான கீரை. மருத்துவ மகத்துவம் நிறைந்தது. இதில் சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து உள்ளது.

சிறுகீரையுடன் சீரகம், மிளகு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு இவற்றைச் சேர்த்து வேகவைத்து சூப் எடுத்துச் சாப்பிடலாம். கீரையைக் கடைந்து சாதத்துடன் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் சிறுகீரை சூப் தினமும் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும். போதை மருந்து, மதுஅருந்துதல் பழக்கத்தை விட நினைப்பவர்கள் சிறு கீரை சூப் செய்து 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிட்டும்.

சிறுகீரையால் நீங்கும் நோய்கள்:

1. காச நோய்

2. கண் நோய்கள்

3. நீர்க்கடுப்பு

4. வீக்கம்

5. பித்த நோய்கள்

6. உடலில் சேரும் நச்சுத்தன்மை

7. வாத நோய்கள்

8. மலச்சிக்கல்

சிறுகீரை உடலுக்கு எழில் தருவதோடு மூளை, இதயம், குடல், ரத்தம் இவற்றிற்கு வலிமையும் தரும்.

கவனிக்க வேண்டியது: வேறு எதற்காவது ஆயுர்வேத மருந்து சாப்பிடுபவர் சிறுகீரையைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது.

 Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

           

Refer this page to your friends / relatives